சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார் நடித்துள்ளார்.
இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெங்களூர் மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:–
கடந்த 2008–ம் ஆண்டு டைரக்டர் ராம்கோபால் வர்மா என்னை அணுகி வீரப்பன் பற்றி இந்தியில் படம் இயக்கப்போவதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தியில் மட்டும் அந்த படத்தை எடுக்க அனுமதி கொடுத்தேன்.
தமிழ், கன்னடம் உள்பட பிறமொழிகளில் வெளியிட்டால் அதன் உரிமையை வழங்குவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் ஒப்பந்தத்துக்கு மாறாக ‘கில்லிங் வீரப்பன்’ படத்தை கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை மீறி படம் எடுத்துள்ள ராம்கோபால் வர்மாவிடம் பலமுறை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் இந்த படத்தில் எனது கணவரையும், என்னையும் தவறாக சித்தரிப்பதாக தெரிகிறது. எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூர் மாநகர 32–வது அமர்வு நீதிமன்ற நீதிபதி சூரியவம்சி, ‘கில்லிங் வீரப்பன்’ படத்துக்கு வருகிற டிசம்பர் 17–ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் முத்துலட்சுமியின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, டைரக்டர் ராம்கோபால் வர்மாவுக்கு சம்மன் அனுப்பவும் உத்தர விட்டார். இதனால் இந்த படத்தை உடனே திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ராம் கோபால் வர்மா முத்துலட்சுமி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று பெங்களூர் வந்த ராம்கோபால் வர்மாவிடம் முத்துலட்சுமி தரப்பினர் ரூ.25 கோடி கொடுத்தால் வழக்கை வாபஸ் பெறுவோம் இல்லை என்றால் படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறியதாக தெரிகிறது.
இதற்கு பதில் அளித்த ராம்கோபால் வர்மா, 2008–ம் ஆண்டே முத்துலட்சுமிக்கு ரூ.31 லட்சம் கொடுத்து இந்த படத்தை தயாரிக்கும் உரிமையை பெற்றேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி முத்துலட்சுமி கூடுதலாக பணம் கேட்பது சரியல்ல. அதுவும் அவர் கேட்கும் ரூ.25 கோடியை கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.